
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி மரியம் திரேசியா சிரமெல், திரிச்சூர் மாவட்டம், புத்தன்சிரா என்ற இடத்தில் 1876-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26-ந் திகதி பிறந்தார். தனது 50-வது வயதில் குழிக்கட்டுசேரி என்ற இடத்தில் 1926-ம் ஆண்டு, ஜூன் மாதம் 8 ஆம் திகதி மரணமடைந்தார்.
இவர் ஹொலி பமிலி என்ற திருச்சபையை நிறுவியதுடன், 12 ஆண்டுகளுக்குள் 3 புதிய கன்னியர் மடங்கள், 2 விடுதிகள், ஒரு ஆய்வு இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றை ஏற்படுத்தி சாதனை படைத்தார்.
இவர் உருவாக்கிய ஹொலி பமிலி திருச்சபையில் பயின்ற 1,500-க்கும் மேற்பட்ட சகோதரிகள் கேரளா, வட இந்தியா, ஜேர்மனி, இத்தாலி, கானா ஆகிய பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தோலிக்க விதிகளின் படி ஒருவர் புனிதராக அங்கீகரிக்கப்படுவதற்கு 2 அற்புதங்கள் செய்திருக்க வேண்டும்.
அந்த வகையில், கேரளாவில் 1956-ம் ஆண்டு பிறந்த மத்யூ பெல்லிச்சேரி என்பவருக்கு கால்கள் வளைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதன்போது, மரியம் திரேசியாவின் உதவியை நாடி இவரது குடும்பத்தினர் 33 நாட்கள் உபவாசம் (உண்ணாநோன்பு) இருந்து பிரார்த்தனை செய்தனர். இதன் காரணமாக அவரது கால்கள் நேராகி இயல்பாக நடந்தார். இது அற்புதமாக கருதப்பட்டது.
இதன் காரணமாக மரியம் திரேசியாவுக்கு 2000-ம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி புனிதர் பட்டத்துக்கு முந்தைய தகுதி நிலை வழங்கப்பட்டது.
உடல்நலமற்ற கிறிஸ்டோபர் என்ற குழந்தையின் நோய்க்கு, மரியம் திரேசியா நிவாரணம் வழங்கினார். இதை ஓர் அற்புதமாக போப் பிரான்சிஸ் ஏற்று அங்கீகரித்தார்.
இதையடுத்து வத்திகானில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழாவில் மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வத்திகானில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த அருட்தந்தை குரியக்கோஸ் எலியாஸ் சவாரா, சகோதரி யூப்ரசியா, சகோதரி அல்போன்சா ஆகியோர் புனிதர் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
