இசையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், குமரவேல், டிடி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சரி தற்போது கதை பற்றி பார்க்கலாம்….
இந்தியாவிலேயே நம்பர் வன் மிருதங்க வித்துவானாக நெடுமுடி வேணு திகழ்கிறார். இதிலும் நம்பர் வன் என்பதால் அவருக்கு கொஞ்சம் திமிரும் காணப்படுகின்றது.
சாதாரணமாக சொல்லப்போனால் மிருதங்கம் வாசிக்க தன் விரல்களே தனக்கு எல்லாம் என்பதால் மற்றவரிடம் கைலாகு கொடுப்பதைக்கூட இவர் தவிர்ப்பார். ஆனால் இவரிடம் தாளம் பயில பலர் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
பின்னர் இவருக்கு மிருதங்கங்களை செய்துக் கொடுக்கும் குமரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ் இவரிடம் தாளம் பயில ஆசைப்படுகிறார். ஏற்கெனவே அவரிடமும் இசை ஆர்வம் இருப்பதால் கற்றுக் கொடுக்க நெடுமுடி வேணுவும் சம்மதிக்கிறார்.
ஆனால் கீழ் ஜாதியை சேர்ந்த ஜி.வி. தன் குருவிடம் பயில்வதை தாங்க முடியாத வினீத் சில பிரச்சினைகளால் வெளியேறி தன் குருவை எப்படியாவது மிஞ்சி விட வேண்டும் என துடிக்கிறார்.
இதனிடையில் மற்றொரு பிரச்சினையால் நெடுமுடி வேணு, ஜி.வி.பிரகாஷையும் வெளியே அனுப்பி விடுகின்றார்.
அதன் பின்னர் ஜி.வி.பிரகாஷ் என்ன செய்தார்? மிருதங்க தாளத்தில் சாதித்துக் காட்டினாரா? வினீத் என்ன செய்தார்? யார் ஜெயித்தார்கள்? இக்கேள்விகளுக்கு விடையாக அமைவதே திரைப்படத்தின் மீதிக்கதை.
சரி இந்த படத்தின் பிளஸ் என்று பார்த்தால்….
கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து அலட்டிக் கொள்ளாமல் ஜி.வி.பிரகாஷ் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக ஒருவேளை ஜி.வி. கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் நம்மால் இந்தளவு ரசித்திருக்க முடியாது. இவர் ஒரு இசையமைப்பாளர். எம்மால் அந்த கலையுடன் கூடவே நடிப்பையும் ரசிக்க முடிகிறது.
படத்தின் 2வது நாயகனாக வேம்பு ஐயராக வாழ்ந்திருக்கிறார் நெடுமுடி வேணு. நீயெல்லாம் நம்பர் வன் ஆக வர முடியாது. ஏனா நான்தான் நம்பர் வன் என்று சொல்லும்போதும் கர்வம் தெரிகிறது. தாளத்துடன் படத்தில் நகைச்சுவையையும் இவரே அழகாக செய்திருக்கிறார்.
பல மலையாள படங்களில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளிதான் இப்படத்தின் நாயகி. தமிழில் 8 தோட்டாக்கள், தீதும் நன்று போன்ற படங்களில் நடித்துள்ள அவரின் நடிப்பில் குறையில்லை.
அத்தோடு ரியால்ட்டி ஷோக்களில் நடக்கும் தில்லு முல்லுகளையும் அப்பட்டமாக காட்டியிருப்பது சிறப்பு. அதில் டிவி தொகுப்பாளராக வருகிறார் டிடி.
கூடவே திறமையானவருக்கு மரியாதை எப்படியாவது வந்தே சேரும் என காண்பித்திருப்பதும் இந்த படத்தில் மற்றுமொரு சிறப்பு எனலாம்.
வில்லனாக வினீத். தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். யதார்த்த நடிப்பில் நம்மை எப்போதும் போல் கவர்கிறார் குமரவேல்.
இதன் படத்தின் சர்வமும் நான்தான் என நிரூபித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். குறிப்பாக கர்நாடக இசை சாரலில் நம்மை நனைய வைத்திருக்கிறார்.
அதற்கேற்ப ரவி யாதவ்வின் ஒளிப்பதிவும் இசைந்து கொடுத்திருக்கிறது. சர்வம் தாளமயம் மற்றும் வரலாமா பாடல்கள் கேட்கும் போது மனதில் எதோ செய்கின்றது.
அத்தோடு இந்த படத்தின் மைனஸ் என்று பார்த்தால்,
படத்தின் இடைவேளைவரை படம் செல்வதே தெரியவில்லை. ஒரு நிமிடம்கூட சளைக்காமல் இசையுடம் பயணிக்க முடிகிறது. ஆனால் 2ஆம் பாதியில் கொஞ்சம் நீள்கிறதாய் உணர முடிகின்றது.
அத்தோடு க்ளைமாக்ஸ் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதில் ஒரு ட்விஸ்ட் கலந்து கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
அத்தோடு இப்பட நாயகி அபர்ணா பாலமுரளி நாயகி என்றாலும் ஜி.வி.பிரகாஷிற்கு அக்காவைப் போல தோற்றமளிக்கின்றார். இருப்பினும் அவரது நடிப்பு சிறப்பு..
மொத்தத்தில் சர்வம் தாளமயம்… இசையும் மீளாத மனமும்…





