நொய்டா, லக்னோவில் யானை சிலைகள் வைக்கப்பட்டதற்கான செலவுத் தொகையை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை செலுத்துமாறு வலியுறுத்தலாமென உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்ற காலத்தில் நினைவகங்கள் பல கட்டப்பட்டன.
அதில் மாயாவதி மற்றும் அவருடைய கட்சி சின்னம் இடம்பெற்றதுடன் அதன்போது 1400 கோடி இந்திய ரூபாய் ஊழல் இடம்பெற்றதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கின் மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, நொய்டாவில் யானை சிலைகள் மற்றும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப்பட்டதற்கான செலவை அவரையே திரும்ப செலுத்த செய்யலாமென யோசனையை முன்வைத்தனர்.
மேலும் அப்பணத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்வது சிறந்ததெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் குறித்த வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





