சபரிமலையில் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய பிந்து- கனகதுர்கா ஆகிய இருவரும், மீண்டும் யாத்திரை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்.எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி மீண்டும் சபரிமலைக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்னால், அவர்கள் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பிந்து தெரிவித்துள்ளதாவது, “மத ரீதியான வழிபாட்டை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஆகையால் நான் ஐயப்பனை வழிபடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
அந்தவகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஐயப்ப கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதன்போது நானும் கனகதுர்காவும் சபரிமலைக்குச் செல்ல முயற்சிப்போம்.
நாங்கள் எதிர்கொள்ளும் அவமரியாதைகள், அரசியலமைப்பின் கொள்கைகளையே அவமதிக்கின்றன” என பிந்து குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாமென உச்ச நீதிமன்றம் வழக்கிய தீர்ப்புக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்களினால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கேரள அரசு, நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





