
கடந்த 26-ம் தேதி பரங்கிபேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், பெட்ரோல் நிரப்பிக் கொண்டு, அதற்குரிய தொகையை வழங்காமல், பங்க் ஊழியர் சிவசங்கரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி, பணப்பையை பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்தின்போது பெட்ரோல் விற்பனையில் வசூலான ரூ.2800 அடங்கிய பையை விடாமல், கொள்ளைக் கும்பலோடு கடுமையாக போராடினார் சிவசங்கரன். கொள்ளையர்களில் ஒருவர் சிவசங்கரனை 10 முறைக்கும் மேலாக தொடர்ந்து அரிவாளால் வெட்டினார். ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் பணப் பையை விட்டுவிட்டார். பணப் பையை பறித்த பிறகும் சிவசங்கரன் மீது கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. காயமடைந்த நிலையில் இருந்த சிவசங்கரனை மீட்டுபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பணப்பையில் இருந்த ரூ.2800-க்காக அரிவாள் தாக்குதல்களை எதிர்கொண்டு கொள்ளைக் கும்பலுடன் கடுமையாக போராடிகடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிவசங்கரனுக்கு, கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நேரில் சென்று ஆறுதல் கூறி, அவருடைய தைரியத்தை பாராட்டினார். பல தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. மேலும் பங்க் உரிமையாளர் மணிவண்ணன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிவசங்கரனின் சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிவண்ணன் கூறியதாவது: “6 மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார் சிவசங்கரன். சிறிய தொகை என்றபோதிலும் கடுமையாக போராடியுள்ளார். அவருடன் இருந்த மற்றொருவர் அங்கிருந்து ஓடிய நிலையில். சிவசங்கரன் மட்டும் தன்னந்தனியாக போராடியுள்ளார். அவரதுமனதைரியத்தை பாராட்டியாக வேண்டும்” என்றார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விநியோகிஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி கூறும்போது, “சிறிய தொகை என்றபோதிலும், அந்த ஊழியர் குற்றச்செயலுக்கு எதிராக தீரமாக போராடியது பாராட்டுக்குரிய விஷயம். அரசுக்கு அதிக அளவில் வரி செலுத்துவது எண்ணெய் நிறுவனங்கள். அந்த எண்ணெய் நிறுவனங்களின் முதுகெலும்பாகத் திகழுவது இந்த ஊழியர்களே. வெயில், மழை, குளிர், இரவு என நேரம் பாராமல் அனைத்து கால நிலைகளிலும் பணியாற்றும் இவர்களின் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதது வேதனை அளிக்கிறது” என்றார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
