![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY1NrpSWoXFWU8hl-8auOLJ0PhfKsqdgO3Qp_XNwOqrtQqaialvVDReiK6j1u-f-66OVBqwpp6b5qme4cs6FUMsmg-qQ2yCbnmUAxle3xY8dUn4cL5p0akzcw0M_mm0zFdOIvVADo6s2w/s320/thattungal.com.jpg)
பொருளாதார நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டெடுப்பதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் படிப்படியாக ஊரடங்கை தளர்த்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பட்டுத்துவதில் வெற்றியடைந்துள்ளோம். ஊரடங்கு நடவடிக்கையால்தான் கொரோனா தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பலனாகவே இப்போது நாம் இயல்பு நிலையை நோக்கித் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது” என்று குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க உலக நாடுகள் பலவும் அதன் தொழில் செயற்பாடுகளை முடக்கின.
இதனால் தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி, பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. அதேசமயம் தொழில் செயற்பாடுகளுக்கு அனுமதியளித்தால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்ற நிலையில் பல நாடுகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு, ஆரம்ப நிலையிலான தொழில் செயற்பாடுகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.
இஸ்ரேலில் கடந்த மார்ச் 14ஆம் திகதி ஊரடங்கு அமுல்பட்ட நிலையில் ஒரு மாதம் கடந்து படிப்படியாகத் தளர்த்தப்படுகிறது.
ஊரடங்கினால் இஸ்ரேலின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பல நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் நிலையை எட்டியுள்ளன. வேலையின்மை 25 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இஸ்ரேலில் இதுவரையில் 13 ஆயிரத்து 362 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 171 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 564 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)