இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டவுறிஸ், பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் டேவிட் அஸ்மன், அரசியல் பிரிவுக்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த இவர்கள், மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான வே.தவராஜா, சிவம் பாக்கியநாதன், இராஜேந்திரன், ஜெயா மற்றும் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இதன்போது ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான மட்டக்களப்பின் நிலைமைகள் குறித்து பிரித்தானிய தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.
குறித்த தாக்குதலின் பின்னர் இனங்களிடையே காணப்படும் முரண்பாடுகள் குறித்தும் அவற்றினை நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னெடுப்புகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்ட தூதுவர், பிரித்தானியாவிலிருந்து மட்டக்களப்புக்கு முதலீட்டாளர்களை இணைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக இங்கு உறுதியளித்தார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தூதுவரின் கவனத்திற்கு மாநகரசபை உறுப்பினர்கள் கொண்டுசென்றனர்.
அத்துடன், இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான சூழலை சர்வதேசத்தினால் மட்டுமே ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றிவருவது குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தஆட்சியிலும் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்படும் உதவிகளில் தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தூதுவரிடம் மாநகரசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்
