
இது தொடர்பான விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இவ்வருட பெரும் போகத்தில் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள 23இலட்சத்து 11,300 ஆயிரம் தொன் நெல்லை விற்பனைசெய்ய அரசாங்கம் அனுமதி வழங்காததால் ஏற்பட்டுள்ள களஞ்சியப்படுத்தல் பிரச்சினையை நீக்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் இதற்கென பிரதேச செயலக பிரிவுகளில் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை முதற்கட்டமாக பயன்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
மேலும், 2018-2019 பெரும்போக நெற்செய்கைக்கு இம்மாவட்டத்துக்கும் தேவையான உரமானியத்தை முன்கூட்டியே ஆயத்தம் செய்வதென்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட 8,069 ஏக்கர் நெல் வயலுக்குரிய 3,178 விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டுப்பணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் மழைநீரை வீண் விரயம் செய்யாது தேக்கிவைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விசேட கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், நெல்லை சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் எம்.எல்,டீ.எஸ் கருணாதிலக, பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.வீ.இக்பால், கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் கே.ஜகன்னாத், விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர், எஸ்.பேரின்பராசா, கமநல காப்புறுதி பணிப்பாளர் கே.பாஸ்கரன், தேசிய உரச்செயலக உதவிப் பணிப்பாளர் எஸ்.சிராஜுதீன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
