LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, July 4, 2019

சந்தேகநபர் சுமணன் படுகொலை வழக்கு: பொலிஸாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிராகரிக்க முனைப்பு

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான
சுமணனை தடுப்புக்காவலில் வைத்து சித்திரைவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கோராப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் இவ்வாறு கோரியுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு வேறொரு நீதிபதியை நியமிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவரான பிரதம நீதியரசருக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, திசாநாயக்க முதியன்சேலாகே சிந்தக நிஷாந்த பிரியபண்டார, ராஜபக்ஷ முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ஷ, கோன்கலகே ஜயன்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய ஐந்து சந்தேக நபர்களை அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர்.

அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் துஷித் ஜோன்சன், ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், அக்ரம் ஆகியோர் முன்னிலையாகினர். வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.

விசாரணையின் போது, சந்தேகநபர்கள் ஐவரும் சுமணனை சித்திரவதை செய்த குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவும், அதனால் அவர்களுக்கு எதிராக சுமணனைக் கொலை செய்த குற்றச்சாட்டை முன்வைப்பது சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ள சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணிகள், இதனால் கொலைக் குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையை மன்று தள்ளுபடி செய்யவேண்டும் என கோரினர்.

இதையடுத்து, இந்த வழக்கை மூத்த சொலிஸ்டார் ஜெனரல் குமாரரட்ணம் நெறிப்படுத்துவார் எனவும் அவர் மன்றில் முன்னிலையாவதற்கு தவணை வழங்கப்படவேண்டும் என்றும் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் தெரிவித்தார்.

இருதரப்பு கோரிக்கையையும் ஆராய்ந்த மன்று வழக்கை செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

பின்னணி

சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற 35 இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருட்டுச் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். எனினும் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமணன் பொலிஸ் காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸாரால் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் அறிக்கையிடப்பட்டது.

இச்சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றதாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பெரும் குற்ற வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

அந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் இருவர், சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார உள்ளிட்ட 8 பொலிஸார் மீது சுமணனை சித்திரவதை செய்துகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்லாகம் நீதிமன்றின் அப்போதைய நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் சந்தேகநபர்களின் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்ட சிந்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுப் பத்திரத்தை கிளிநொச்சி நீதிவான் மன்றில் முன்வைத்தனர்.

அத்துடன், சட்ட மா அதிபர் திணைக்களத்தால் பொலிஸ் அதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 8 பொலிஸாருக்கு எதிராக 1994ஆம் ஆண்டு சித்திரைவதைகள் சட்டத்துக்கு அமைவாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

2 பொலிஸார் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திசாநாயக்க முதியன்சேலாகே சிந்தக நிசாந்த பண்டார , திசாநாயக்க முதியன்சேலாகே சிந்தக நிஷாந்த பிரிய பண்டார, ராஜபக்ச முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ச, கோன்கலகே ஜயந்த, ஞானலிங்கம் மயூரன் மற்றும் வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க ஆகிய 6 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.

1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டுச் சட்டம், இலங்கை சித்திரவதைகள் சட்டம், உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சித்திரவதைகளுக்கு எதிரான தீர்ப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பன்னாட்டு நீதிமன்ற போர்க்குற்றத் தீர்ப்புக்கள், உகண்டா நீதிமன்ற சித்திரவதைக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்டவைக்கு அமைவாக 6 குற்றவாளிகளுக்கும் அதிகூடிய தண்டனையாக தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் சிறிஸ்கந்தராசா சுமணனைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் 5 பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பகர்வுப் பத்திரம் மீதான சுருக்க முறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதன் நிறைவில் சந்தேகநபர்கள் ஐவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 2016ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி கட்டளையிட்டார்.

வழக்கு மேல் நடவடிக்கைக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டது. சட்ட மா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியால் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 296இன் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7