
வைகோ, அன்புமணி ராமதாஸ் உட்பட அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர்.
மாநிலங்களவையில், தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் 24ஆம் திகதி முடிவடைகிறது.
இதையடுத்து புதிதாக 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு வருகிற 18ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குறித்த 6 உறுப்பினர்களையும் தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 பேரையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 பேரையும் தெரிவுசெய்ய முடியும்.
அ.தி.மு.க. வேட்பாளர்களாக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி இராமதாஸ் போட்டியிடுகிறார். இவர்கள் 3 பேரும் நாளை மனுத்தாக்கல் செய்கின்றனர்.
தி.மு.க. வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 9ஆம் திகதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப்பெற 11ஆம் திகதி கடைசி நாளாகும்.
இந்தநிலையில், வைகோ, அன்புமணி இராமதாஸ் உட்பட அ.தி.மு.க. – தி.மு.க. வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர்.
இதனால் சுயேட்சைகளின் மனுக்கள் வரும் 9ஆம் திகதி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
