ஆமையன் குளம் என்ற குளத்திற்கு சிங்கள பெயர் சூட்டப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆமையன் குளத்திற்கு ‘கிரி இப்ப வெவ’ என சிங்கள பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி ‘L’ வலையத்திற்குள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்காக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியால் நேற்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவுவும் உருவாக்கப்பட்டு சிங்களமயமாக்கல் தற்போது முல்லைத்தீவு செம்மலை கிராமத்தை அண்மிக்கும் அளவுக்கு வந்துள்ளது.
ஒருபுறம் தமிழ் மக்களுக்காக அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட எல்லைக் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைத்துள்ளமை மகாவலி ஆக்கிரமிப்பாலும் சிங்கள மயமாக்கலினாலும் தொடர்ந்தது அநீதிக்குளாகிவரும் தமிழ் மக்கள் மனதில் விரக்திக்குள்ளாக்கியுள்ளது.