விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் தனக்கு கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அதேவேளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சவாலுக்குட்படுத்துவது தனது நோக்கம் இல்லை என்றும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த விசேட தெரிவுக்குழு குறித்து நேற்று தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், தெரிவுக்குழுவில் வெளியாகும் சில விடயங்கள், தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தடையாக அமைவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அந்தக் கடிதம் தமது உத்தரவு என்றும், அதனை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்பாக தெரிவித்தார்.
ஜனாதிபதியால் அனுப்பப்படும் மகஜர், சபைக்கும் அதற்குமுள்ள தொடர்பிற்கமைவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தெரிவுக்குழுவின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது அவசியமானதாகத் தென்படவில்லை. என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






