
முக்கியமானவர் என கருதப்படும் அஹமட் மில்கான் ஹயாத்து முஹமட் சவுதி அரேபியாவில் கைது செய்யப்படுவதற்கு இன்டர்போல் எச்சரிக்கையே காரணமென அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்டர்போல் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் என்ற 29 வயதுடைய இலங்கையர், பயங்கரவாதம் மற்றும் கொலைகள் என்பன குறித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் என இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சந்தேகத்துக்குரியவர் உட்பட மேலும் நான்கு பேர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கைது செய்யப்படுவதற்கு சர்வதேச பொலிஸாரின் நடவடிக்கையே காரணம் என இன்டர்போலின் செயலாளர் நாயகம் Jurgen Stoc தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இன்டர்போல் உடனடியாக வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கை காரணமாகவே இவர்களை மத்திய கிழக்கு நாடுகளில் கைதுசெய்ய முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளிற்கு உதவுவதற்காக இன்டர்போல் இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருப்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ள இன்டர்போலின் செயலாளர் நாயகம் யுர்ஜென் ஸ்டொக், இதற்கு உதவியதற்காக இன்டர்போல் பெருமைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவாளிகளை கைதுசெய்து நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளில் தங்கள் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்க செய்வதற்கு சிவப்பு எச்சரிக்கை ஒரு முக்கியமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவர்களிடம் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
