
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி எமக்கு அமைச்சு பதவிகளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பயங்கரவாத தாக்குதலை ஜனாதிபதி தலையில் கட்டும் செயற்பாட்டினை ஐ.தே.க முன்னெடுத்துவரும் நிலையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஜனாதிபதியை விமர்சிக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும் என்று காட்டும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டுவருகின்றது.
மேலும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சிலரும் தாக்குதலுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டும் என தெரிவித்துவருகின்றனர். இவர்கள் திட்மிட்டு ஜனாதிபதியை இந்த விடயத்தில் சிக்கவைக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
எங்களுக்கு ஜனாதிபதியுடன் ஆரம்பத்தில் கோபம் இருந்திருந்தாலும் கூட இறுதியில் அவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி அமைச்சுப் பதவிகளை வழங்கி அரசாங்கத்தை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்திருந்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியை விமர்சித்து வருகின்றது. ஆனால் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தற்போது ஏன் ஜனாதிபதியை விமர்சிக்கவேண்டும்” என்றும் கேள்வியெழுப்பினார்.
