
பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும் என்று பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூடான் நாட்டில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவி விலகியுள்ளார்.
அதன்பின்னர், சிவில் ஆட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கார்த்தோமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியிலும் போராட்டம் இடம்பெற்றதால் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உள்பட 61 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ரோம் நகரத்தின் புனித பீட்டர் சதுக்கத்தில் பொது மக்களுடனான வாராந்த பிராத்தனை நிகழ்ச்சியில் உரையாற்றிய பாப்பரசர் பிரான்சிஸ் ‘சூடான் நாட்டில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மேலும், இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், சூடானில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
