
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய உட்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று (சனிக்கிழமை) முசாபர்பூர் அரச மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது.
இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறன.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தற்போது 73 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பால் 117 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
‘ஒக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் ஒக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக் காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
