ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள்குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இரண்டாவது அமர்வு சற்றுமுன்னர் கூடியுள்ளது.
இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜெயம்பதி விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.
இன்றைய விசாரணையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரவி கருணாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, காவிந்த ஜயவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.





