
அந்தவகையில், அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன் முதலாவது கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட நிலைமையை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு ஒருமாத குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறித்து கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் ஜனாதிபதிக்கு முதலில் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான தளமொன்றை ஏற்படுத்திக்கொடுத்து இத்தகையதொரு கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்திருப்பதையிட்டு ஜனாதிபதியை வரவேற்றனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தபோதும் உலகில் ஏனைய நாடுகள் இந்த பயங்கரவாத அமைப்பு குறித்து பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் படி நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார்.
இந்த சர்வதேச நிலைமைகளை கருத்திற்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த சபையை மாதத்திற்கொருமுறை கூட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள், பலவீனங்கள் இருக்குமானால் அதுபற்றி இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியும் என்றும் கருத்துக்கள், முன்மொழிவுகள், பிரச்சினைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் இச்சபை திறந்த ஒரு தளமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடுவதற்கு கடந்த சில தினங்களாக தனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து அவர்கள் அனைவரும் திருப்தியுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கேற்ப சுற்றுலா பயணிகளுக்கு சில நாடுகள் விதித்திருக்கும் தடையை விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிகக் குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த கலந்துரையாடலில், மகாசங்கத்தினர் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சிரேஷ்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக உபவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள் மற்றும் பதில் கடமை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்களும் பங்குபற்றினர்.
