
(பாண்டி)
வடக்கு மாகாணத்தில் நடைபெறும் அபிவிருத்தியுடன் ஒப்பிடும் போது கிழக்கு மாகாணத்தில் மந்த கதியில் அபிவிருத்தி நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கிழக்கு மாகாணத்தை மாற்றுச் சமூகத்திடம் விற்றுவிட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
எமது மக்களுக்கு பல தேவைகள் இருக்கின்றன நாங்கள் பெயரளவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக அவர்களுக்கு தேவைப்படும்போது கை உயர்த்துபவர்களாக தொடர்ந்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கொம்மாதுறை விநாயகர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் -
'ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது வடக்கு அபிவிருத்தி அமைச்சையும் தன்னுடைய அமைச்சில் இணைத்துக்கொண்டார் கிழக்கு அபிவிருத்தி என்ற வாசகம் அதில் உள்ளடக்கப்படவில்லை.
அன்மையில் நிதி அமைச்சில் அபிவிருத்திகளுக்கான ஆராய்வுக் கூட்டம் நடைபெற்றது அங்கு வட மாகாணத்துக்கான அபிவிருத்தி ஆய்வு கூட்டமாகவே இருந்தது கிழக்கு மாகாணம் பற்றிய சிந்தனையே இல்லை.
ஒக்டோபர் சூழ்சியை முறுகியடிக்க வட மாகாண மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமா ஆதரவு வழங்கினார்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு வழங்க வில்லையா? அரசாங்கம் தொடர்ந்தும் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்ற முடியாது இதனை ஒது போதும் அனுமதிக்க முடியாது.
வட மாகாணத்தைச் சேர்ந்த பலர் மேலத்தேய நாடுகளில் வசிக்கிறார்கள் அவர்கள் அந்த மாகாணத்தின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி வழங்குகிறார்கள் கிழக்கு மாகாணத்தில் அவ்வாறில்லை.
கிழக்கு மாகாணத்தை மாற்றுச் சமூகத்திடம் விற்றுவிட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் அது மாத்திரமின்றி கிழக்கு மாகாண ஆளுநர் கூட சகோதர இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கவில்லை சகோதர இன அமைச்சுகளினால் தமிழ் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினுடாகவே மேற்கொள்ள வேண்டும் அது அரசாங்கத்தின் கடமை ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை.
நல்லிணக்க அமைச்சினூடாக மட்டக்களப்பிலுள்ள பாலங்கள் அமைப்பதற்கு 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் மாவட்ட செயலகத்திற்கு வந்தது ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.
லக்ஸமன் கிரியல்ல நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த போது குறுமன்வெளி பாலத்திற்கு அடிக்கல் வைத்தார் அதற்குப் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னுமொரு அமைச்சர் கிரான்புல்சேனை அணைக்கட்டுக்கு அடிக்கல் வைத்தார் அதுவும் எதுவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. மட்டக்களப்பில் விளம்பரத்துக்காகவே அடிக்கல் நடப்படுகிறது.
வாழைச்சேனை கடதாசி ஆலை கட்டியெழுப்ப கொரிய நாட்டின் 20ஆயிரம் மில்லியன் டொலர் நிதி கிடைத்தது அந்த நிதியை பிரதமர் எம்பிலிப்பிட்டயிலுள்ள தொழிற்சாலையை கட்டுவதற்கு வழங்கிவிட்டார்' என்றார்.
