
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தியதுடன் குருகந்த ரஜமஹா விகாரையையும், பிரமாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த ஆலயம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இவ்வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் பௌத்த பிக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்கின் ஒருதரப்பான பௌத்த பிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளதன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் மன்றில் தெரிவித்தார் .
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
