கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள், முன்னாள் வட. மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், ”ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்” எனும் தலைப்பில் நிலாந்தன் அரசியல் ஆய்வுரையும் நிகழ்த்தினார்.
யுத்த காலத்தில் ஊடகத் துறையில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தியின் நினைவாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில், “காலத்திற்கு காலம் தொடர்ந்து இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்த சூழ்நிலைகளின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதிகளிலும் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் பல்வேறுபட்ட அச்சுறுத்தல், இன்னல்களை எதிர்கொண்டு எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
மாவட்டத்தில் அர்ப்பணிப்புக்களுடன் பணியாற்றியவேளை போரின் போது கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சி நகரத்தில் கொல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் இந்த நினைவுத்தூபியினை அமைப்பதற்கான பொருத்தமான இடம் ஒன்றினை வழங்க உதவுவதற்கு கரைச்சிப் பிரதேச சபையிடம் நாங்கள் வினையமாக வேண்டி நிற்கின்றோம். எமது கோரிக்கைக்கு அமைவாக பொருத்தமான இடம் ஒன்றினை தெரிவுசெய்து எமக்கு வழங்கி உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது