இந்த சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வட. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களும் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டத்தின் சுகாதார நிலைமை இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருப்பதனால் மாவட்ட பொது வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வது மிகவும் அத்தியாவசியமானது என செல்வம் அடைக்கலநாதனினால் சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் போதிய வசதிகள் இன்மையால் மக்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளை நோக்கிச் செல்லவேண்டியிருப்பதால் மன்னார் மாவட்ட மக்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஏனைய வைத்தியசாலைகளில் கட்டட மற்றும் மருத்துவ வசதிகள் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.
மன்னார் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சைக் கூடம், நிரந்தர நோயாளர் விடுதிகள், வைத்தியர்களுக்கான நிரந்தர தங்குமிட வசதிகள் போன்றவற்றை அமைப்பது, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் கதிரியக்க இயந்திரங்கள், சத்திர சிகிச்சை கூடத்துக்கான உபகரணங்கள், ஆய்வு கூட உபகரணங்கள், கணினிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் திட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு விசேட முக்கியத்துவம் வழங்கி வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்கு விரைந்து ஆவன செய்வதாக சுகாதார அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற வைத்தியர்கள், தாதியர் பற்றாக்குறைகள் குறித்தும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் மன்னார் வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நாடாளுமன்ற உறுப்பினரினால் முன்வைக்கப்பட்டது. இது குறித்தும் சாதகமாக பரிசீலிப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






