குறித்த 26 மீனவர்களும் நேற்று (வெள்ளிக்கிழமை) மதுரையை வந்தடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களது சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மதுரை விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் இராமநாதபுரம்- மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி இந்திய கடல் பகுதியில் மீன் பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கையின் கடற்பகுதியில் சட்டவிரோதமான மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை கைது செய்து அழைத்து சென்று, ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோன்று ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், நம்புதாளையைச் சேர்ந்த 8 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் அனைவரும் கடந்த 8ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் இந்திய துணை தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, மெரிகானா முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும், விமானத்தின் ஊடாக நேற்று மதியம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு. பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






