
அத்துடன், விமானி குறித்த காணொளியை வெளியிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் இன்று (புதன்கிழமை) சுட்டு வீழ்த்தியது.
இதன்பின்னர் அந்நாட்டின் எல்லைக்குள் ஊடுருவியதாக கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை பாகிஸ்தான் வெளியிட்டது. அத்துடன் காணொளி காட்சியையும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை, காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள சரத்துக்களை மீறும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள விமானி அபினந்தனுக்கு எந்தவித தீங்கும் ஏற்படக் கூடாது எனவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
