
பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் இராணுவம், இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விமானப்படையும் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளது.
அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் கண்காணிப்பு பணியில் எம்.ஐ.–17 ரக உலங்கு வானூர்தி ஈடுபட்டுவந்த நிலையில் இன்று (புதன்கிழமை) விபத்துக்கு உள்ளாகியது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த உலங்கு வானூர்தி, கரேந்த் கலான் என்ற கிராமம் அருகே தரையில் விழுந்து இரண்டாக நொறுங்கி தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் உலங்கு வானூர்தியில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். இறந்த 6 பேர் விமானப்படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
