ஸ்கார்பரோவில் உள்ள வீடு ஒன்று பகுதியளவில் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இருப்பினும் அங்கிருந்தவர்கள் அதிஸ்டவசமாக தப்பித்துள்ளனர்.கிங்ஸ்டன் வீதி மற்றும் பேர்ச்மெளண்ட் வீதிப் பகுதியில், ஹார்டிங் ப்லேவார்டில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று முன்தினம் சனிக்கிழமை 11.15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த வீட்டில் குடியிருந்தவர் தெரிவிகையில் “நான் குளித்துக் கொண்டிருந்த வேளையில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டது.
இதன் பின்னர் மகனும் பயந்து சத்தமிட்டவாறு என்னை அழைத்துக் கொண்டிருந்தான். அத்தோடு வீட்டில் இருந்த பொருட்கள் நகரத் தொடங்கிய வேளையில் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்துவிட்டோம்.
இதன் பின்னர் சுமார் 45 நிமிடங்களின் பின்னர் வீட்டின் வடக்கே உள்ள செங்கல் கட்டுமானம் இடிந்து வீழ்ந்தது.” என கூறினார்.
இவ்வாறு கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான தெளிவான காரணம் இன்னமும் தெரியவில்லை என்ற போதிலும், அத்திவாரத்தில் விரிசல் ஏற்பட்மையால் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது குறித்து ரொறன்ரோ தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “அந்த கட்டிடத்தின் முதலாம் தளம் பெரும்பாலும் முற்றாக இடிந்து வீழ்ந்துவிட்டது. இதனால் இரண்டாவது தளம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.
அருகே உள்ள மேலும் சில வீடுகளில் இருந்தோரையும் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற்றியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.





