பிரதமர் அலுவலகத்திற்குள் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படவேண்டுமென அவர் தனது டுவிட்டர் பதிவில் இன்று (சனிக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் “தன்னுடைய அலுவலகம், கொல்கத்தா பொலிஸ் ஆணையாளர் இல்லம் ஆகியவற்றில் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டதைப் போன்றே சுதந்திரமான சி.பி.ஐ. அமைப்பு, பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளமை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





