புல்வாமா தாக்குதலையடுத்து அரசாங்கம் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கும் வகையில் நாளை(சனிக்கிழமை) காலை டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய துணை இராணுவப் படையை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா இரத்து செய்தது.
இதைதொடர்ந்து, புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாளை காலை 11 மணியளவில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





