அயல்நாடான பங்களாதேஷிற்கு அதிக முன்னுரிமை அளித்து அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அனைத்து ஆதரவையும் இந்தியா அளிக்க தயாராகவுள்ளது. இதனால்தான் தீர்க்கப்படாமல் இருந்த சில இருதரப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்ட முடிந்தது. நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படும்.
எரிசக்தித்துறை,வீதியமைத்தல், ரயில்வே, துறைமுகங்கள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். இதன்மூலமாகஇருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தையும் மேம்படுத்த முடியும்.
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி பங்களாதேஷிற்கு சென்று திரும்பியபிறகு, இருநாடுகளுக்கு இடையே 90 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது இருதரப்பு உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவும்” எனக் கூறினார்.
இந்த கூட்டு ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் பங்கேற்றிருந்தார்.
இந்தியா – பங்களாதேஷிற்கு இடையேயான 5ஆவது கூட்டு ஆலோசனைக்குழு கூட்டம் கடந்த 8ஆம் திகதி டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இவ்வாறு கூறினார்.





