பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சின்ன காஞ்சிபுரம் திராவிட நாடு அலுவலக கட்டடத்தின் முகப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தி.மு.க.வின் மறைந்த முன்னாள் தலைவர் அண்ணா, கருணாநிதியின் முழு உருவச் சிலைகயை மு.க.ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மத்தியில் மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்திலும் தனது ஆட்சியை தொடருவதற்கு முயலும் மோடியின் செயற்பாட்டை தகர்த்தெறிய வேண்டும். மக்களுக்கு, அவர் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
அத்துடன் மோடியின் ஆடசியில், நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையை யாராலும் மறுக்க முடியாது.
இதேவேளை தற்போது தமிழகத்தை ஆட்சி செய்கின்றவர்கள், மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள்.
இதனால் அவர்களது ஆடசிக்கு, நடைபெறவுள்ள தேர்தலின் ஊடாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.





