(பாண்டி)
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எப்.மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அருள்குமரன், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி.கே.நவரெட்ணராஜா, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் எல்.அஹமட் லெப்பை, வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உப தலைவர் எம்.எஸ்.ஹாறுன், வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் எம்.தாஹீர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எம்.முஸம்மில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலைக்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் நோயாளர் விடுதிகளுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்ததுடன், பழைய கட்டடங்கள் என்பவற்றை பார்வையிட்டார்.
அதன்பிற்பாடு ஆளுநனுடன் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுமிடையில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் உட்பட்ட ஆளனி பற்றாக்குறை, கட்டட பற்றாக்குறை, குடி தண்ணீர் பிரச்சனைகள் உட்பட்ட பல்வேறு பற்றாக்குறைகள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதங்களிற்குள் வைத்தியசாலைக்கு தேவையான பன்னிரண்டு வைத்தியர்கள், பத்து தாதியர்கள், பிரதேசத்தை அண்டியுள்ள 52 சிற்றூழியர்கள், இயந்திரங்கள், தண்ணீர் வசதிகள் போன்ற பிரச்சனைகள் தீர்த்து தரப்படும் என்று வாக்குறுதி வழங்கினார்.
மேலும் கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் மூலம் உள்ளக வீதிகள் அமைப்பதற்கு இரண்டு மில்லியன் ரூபாவும், பிணவறை திருத்துவதற்கு மூன்று மில்லியன் ரூபாவும், சிறுவர் பூங்கா அமைக்க ஐந்து மில்லியன் ரூபாவும், கதிர்வீச்சு இயந்திரம் உட்பட இயந்திர கொள்வனவுக்கு ஒன்பது மில்லியன் ரூபாவும், என்டர்ஸ்கோபி இயந்திர கொள்வனவுக்கு பத்து மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் வாக்குறுதி வழங்கினார்.
