ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலின், பிரதானமாக செயற்பட்ட தீவிரவாதிகள் இன்று (திங்கட்கிழமை) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.புல்வாமா தாக்குதலுக்கு பிரதானமாக இருந்து செயற்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரஷீத் காஜி மற்றும் ஹிலால் ஆகிய திவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களிடமிருந்து ஆயுதங்கள், தானியங்கித் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராணுவம் குவிக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. இதன்காரணமாக புல்வாமா மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில், நான்கு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, காஷ்மீர் பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது.
இந்தநிலையில், இன்றும் தீவிரவாதிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. காஷ்மீர் பொலிஸாரும் இராணுவத்தின் 55 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவினரும் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டனர்.
குறித்த பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்ததை அறிந்துக் கொண்ட தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது.





