இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “விவசாயிகளின் கடுமையான நெருக்கடி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் சீர்குலைவு எல்லாவற்றுக்கும் மேலாக பணித் தளங்களில் பிரிவினை சக்திகள் ஆகியவை இன்று நாடு எதிர்கொள்ளும் சவால்களாக அமைந்துள்ளன.
விவசாயிகளின் தற்கொலைகளும், விவசாயிகள் அடிக்கடி நடத்திவரும் போராட்டங்களும் எமது பொருளாதார கட்டமைப்பு சமநிலையின்மையை பிரதிபலிக்கிறது. இதை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.
வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அது வேலை இழப்பு வீழ்ச்சிக்கு வழியேற்படுத்தியுள்து. கிராமப்புறங்களில் கடன்கள் பெருகி வருவதும், நகர்ப்புறங்களில் நிலவும் குழப்பங்களையும் சேர்ந்து எதிர்பார்ப்பு மிக்க இளைஞர்களை அமைதியிழக்கச் செய்கிறது.
தொழிற்துறையில் கூடுதல் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. தொழிற்துறையும் வேகமான வளர்ச்சியை அடையவில்லை.
நாட்டின் பொருளாதாரம் பெருகுவதில் சிறு தொழிற்துறையும், அமைப்பு சாரா தொழிற்துறையும் துடிப்பு மிக்கவை. ஆனால் பேரழிவை ஏற்படுத்தியுள்ள ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையாலும், சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்டதாலும் வேலை வாய்ப்புக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தொழிற்துறையையும், வர்த்தகத் துறையையும் ஊக்குவிப்பதற்கு நல்ல ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் கொள்கைகளும், நல்ல செயற்பாட்டு உத்திகளுமே தேவையானது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் உலகப் பொருளாதாரத்தில் நாம் எம்மை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். உலக சந்தைக்கு நம்மை வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால் இன்னோரு பக்கத்தில் உள்நாட்டில் நாம் மிகப்பெரிய பொருளாதார, சமூக சவால்களை எதிர்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.





