கலிபோர்னியாவின் வாலஜோ பகுதியில் விருந்தகமொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்ஸ் காரில் வைத்து பொப் பாடகர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை இனவாத செயல் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று நீண்டநேரம் அங்கு தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விருந்தகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் காரின் அருகில் சென்று அவதானித்துள்ளார்.
காரின் சாரதி ஆசனத்தில் ஒருவர் அசைவற்று சரிந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தேகம் கொண்டு காரை நெருங்கிச் சென்று ஆராய்ந்துள்ளனர்.
பூட்டி இருந்த காரின் கதவை திறந்தனர். அப்போது சாரதி ஆசனத்தில் ஒருவர் அசைவின்றி கிடப்பதையும், அவரது மடியில் துப்பாக்கி ஒன்று இருந்ததையும் அவதானித்தனர்.
கார் இயக்க நிலையிலேயே இருந்துள்ளது. அதன் இயக்கத்தை நிறுத்த முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த நபர் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார். இதனை கவனித்த பொலிஸார் தங்களை நோக்கி சுட முயற்சிப்பதாக நினைத்து, அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், குறித்த பொப் பாடகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அவர், பாப் பாடகர் வில்லி மெக்காய் என தெரியவந்தது. இந்த சம்பவம் கடந்த 9-ம் திகதி நடைபெற்றுள்ளது.
இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலை என்றும், சம்பவத்தில் தொடர்பு கொண்ட 6 பொலிஸாரின் இனவாத செயல் என்றும் மெக்காயின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே அவரை சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தரப்பில் கூறியுள்ளனர்.
இது குறித்து வில்லி மெக்காயின் சகோதரன் மார்க் மெக்காய் கூறுகையில் , ‘பொலிஸார் அமைதியான முறையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யாமல், இவ்வாறு செய்தது முறையற்றது’ என கூறியுள்ளார்.
சென் பிரான்ஸிஸ்கோவுக்கு அருகே உள்ள வாலஜோ நகரத்தில் கறுப்பின மக்களுக்கு எதிராக பொலிஸார் இவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வழமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





