ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அன்பழகன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“தற்போதைய ஆட்சியாளர்கள் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்க வேண்டிய 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை இந்த அரசு உள்நோக்கத்துடன் நிதி நெருக்கடி என்ற பொய்யான காரணத்தை காட்டி அமுலாக்கவில்லை.
அந்தவகையில் அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்த கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்முடிவினையும் அமுல்படுத்துவார்களா என்று தெரியவில்லை.
இந்நிலையில், தங்களது சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.” என அன்பழகன் கவலை வெளியிட்டுள்ளார்.





