கையூட்டு பெற்றுக்கொள்ளவும், கொள்ளை அடிக்கவும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு என்ற ஒரு நாடகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.கரூர் மாவட்டத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முதல்வர் எடப்பாடி இப்போது, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறாராம். அதற்கு கோடிக்கணக்கில் செலவு.
ஜெயலலிதா இருந்த போதும் நடத்தினார்கள். முதல் உலக முதலீட்டார் மாநாட்டில் 2.42 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்துள்ளோம். அதில், லட்சக்கணக்கான இலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரப் போகிறோம் என வாக்குறுதி கொடுத்தார்கள்.
இப்போது சட்டமன்றத்தில் 80 ஆயிரம் கோடி வந்துள்ளது என்று சொல்லியிருக்கின்றார்கள். 2015-ல் அறிவித்தது 2.42 இலட்சம் கோடி ரூபாய்? வந்ததா? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டதா? 4 வருடம் ஆகிவிட்டது.
இப்பொழுது இரண்டாவது உலக முதலீட்டார் மாநாடு நடத்துவதற்கு ஒரே காரணம், கொள்ளை அடிப்பதற்கும், கமிஷன் வாங்குவதற்கும் தான்.
ஊரில் இருக்கும் குப்பனையும், சுப்பனையும் கூட்டிக்கொண்டு உட்கார வைத்து சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறான், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறான் என ஒரு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய நிலை.
ஆகவே தான் இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி இருக்கின்றது. இந்த ஆட்சிக்கு பக்கபலமாக ஒரு பாசிச ஆட்சி மதவாதம் பிடித்த ஆட்சி மோடி ஆட்சி.
அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் என்ன சொன்னார், நான் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டாரா? இல்லை.
இந்த நிலையில்தான் இந்த இரண்டு கட்சிகளும் இருக்கின்றன. இந்த இரண்டு ஆட்சியையும் அப்புறப்படுத்துவதற்கு நீங்கள் தயாராக இருங்கள்.
நீங்கள் தயாராகி விட்டீர்கள், என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையோடு தான் வந்து இருக்கின்றீர்கள்“ என தெரிவித்துள்ளார்.





