இயற்கையான உலகத்தை நாங்கள் மிக இலகுவாகவும் சிறிதளவு கூட கவனமின்றியும் அழித்து வருவதாக இளவரசர் வில்லியமுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது சேர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் இடம்பெற்றுவரும் உலக பொருளாதார அரங்கில் இயற்கைவாதி டேவிட் அட்டன்பரோவை இளவரசர் வில்லியம் பேட்டி கண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய டேவிட் அட்டன்பரோ கூறியதாவது;
மக்கள் இயற்கையை மதிக்க வேண்டும், அக்கறை கொள்ளவேண்டும். உலகை பாதுகாப்பதற்கு உலகத்த தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நாம் இயற்கையை மட்டும் அழிக்கவில்லை அதோடு சேர்த்து மனிதகுலத்தையும் அழித்து கொண்டிக்கிறோம்.நாம் இயற்கைக்கு விளைக்கும் சேதம் எமக்கு விளைக்கும் சேதம் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாம் உண்ணும் உணவும் சுவாசிக்கும் காற்றும் இயற்கையிடமிருந்தே கிடைக்கிறது, இயற்கையை பாதுகாப்பதற்கான சக்தி எம்மிடம் இருக்கிறது, இயற்கையுடன் இணைந்து இசைவாக வாழக்கூடிய அறிவு எம்மிடம் இருக்கிறது.
இயற்கை உலகை பாதுகாப்பதற்கான புதிய ஒப்பந்தமொன்று உலக நாடுகளிடையே கொண்டுவரப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்களை கையாள்வதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
மேலும் இவ்வுடன்படிக்கையில் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் நிதி அமைப்புகளின் மத்தியில் சுற்றுச்சூழலை வைப்பதோடு காலநிலை மாற்றம், பல்லுயிர் வீழ்ச்சி, உயர் கடல் மற்றும் மேம்பாட்டு சூழலுக்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான முயற்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டுமென டேவிட் அட்டன்பரோ தெரிவித்தார்.
டேவிட் அட்டன்பரோவை பேட்டி கண்ட இளவரசர் வில்லியம் உலகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்





