எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.இப்பேரணி வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் எட்டு மாவட்டத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வவுனியா மாவட்டத்தின் ஊடகப்பேச்சாளர் கே.தவராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பின் சார்பில் இந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீட்சிக்கும், அவர்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் சரியான முறையில் தீர்வைத்தர வேண்டும் என்பதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளோம்.
அத்துடன் வரும் மார்ச் மாதம் சர்வதேச மனித உரிமைப் பேரவையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நியாயமான தீர்வை மீண்டும் வலியுறுத்துவதற்காகவும் இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இப்பேரணிக்கு பூரணமான ஆதரவை எட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கிய சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் வழங்கவேண்டும். அத்தோடு பல்கலைக்கழகத்தைச் சார்ந்தோரும், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இணைந்து இப்போராட்டத்தை வலுப்பெறச்செய்யவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.





