
நெடுந்தூர ரயில் பயணமொன்றில்
வரலாற்று
நாவல் ஒன்றினை
ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்
அக்கால மாந்தர்களது வாழ்வியல்
அரசனின் அந்தப்புரம்
சித்திரவதைக் கூடங்கள்
குதிரைகளின் படையணி
விசித்திரமான வழக்குகளூம் தீர்ப்புகளுமென
மிகப் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருந்தது கதை
கதையின் ஒரு பக்கத்தில்
புதையல் இருக்கும் இடம் பற்றி
வரைபடத்துடன் சொல்லப்பட்டிருந்தது
அதில் குவிந்து கிடக்கும்
ஆபரணங்களின் ஔி கண்களை பறித்தது
பயணிகள் ஆழ்ந்துறங்கும் நடுநிசியில்
புதையல் இருக்கும் பக்கத்தினுள்
ஒரு திருடனைப் போன்று
மெதுவாக இறங்குகிறேன்
ஆனால் புதையலை பாதுகாப்பதற்காக
அரசனால் ஏவிவிடப்பட்டிருந்த
பூதம் இருந்த வரிகளை
அவசரத்தில் வாசிக்க மறந்து விட்டேன்
நான் இப்போது பிரதியின்
நூற்றி ஒராவது பக்கத்தில்
பூதத்திடம் மாட்டிக் கொண்டு
தப்பித்து வர வேறு வழியின்றி
போராடிக் கொண்டிருக்கிறேன்
சக பயணிகளில் யாராவது ஒருத்தர்
உடனடியாக இந்தப் பிரதியை வாசித்து
என்னை காப்பாற்றுங்கள்
ஜன்னலோர இருக்கையில் கிடக்கிறது பிரதி
0
ஜமீல்
