பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனைகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து வரக்கூடியவர்களால் தொற்று அதிகரித்துள்ளது.
சென்னையில் மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தினால் தொற்று அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. சிறப்பான சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழுவுடன் 14 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
12 மண்டல அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.தொழில் துறையினருக்கு அளிக்க வேண்டிய தளர்வுகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் செலவில் 170 ரயில்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவை எதிர்கொள்ள புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)