![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSpXccY3z6VqeUwLJ3_b-qixqErVbgU7d8GKjxcTG0dB8SYSrkxsc4po8lea7uWFy5ZwO5-x9p-J8MlILw8UtDeZFBSU8XL0wq32i4eMkB2MzXNfC6zWGrLJPsy8YZKzkXoy3P12CsFG8/s320/thattungal.com.jpg)
விமர்சனங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திரா பிரகாஷ் பதிலளித்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி கொழும்பில் நிவாரணப்பணியில் ஈடுபட்டிருந்த உமாச்சந்திரா பிரகாஷ் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.
இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் பலரும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர்.
இந்தநிலையில் இதுகுறித்து ஆதவன் செய்திப்பிரிவு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திரா பிரகாஷிடம் வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், தான் முறையான அனுமதி பத்திரத்துடனேயே யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும், மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்றிருந்ததாக குறிப்பிட்டார். இதன்போது உமாச்சந்திரா பிரகாஷ் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
‘எனக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. எனக்கு வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளமையினைப் போன்றதொரு சிறப்பு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நான் கடந்த 08 ஆம் திகதி கொழும்பிற்கு சென்றிருந்தேன். இதன்போது ஒரு தடவை மாத்திரமே மாநகர சபைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வெளியே வரும்போது முறையான தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன், அதற்கான சிட்டையினையும் பெற்றுக்கொண்டிருந்தேன்.
நான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்பதனால் என்னால் நிவாரணப் பொருட்களை வழங்க முடியாது. இதன்காரணமாக கடந்த 10ஆம் திகதி காலை வெள்ளவத்தை மயூராபதி அம்மன் கோவிலுக்கு அருகில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் இடத்திற்கு சென்றிருந்த நான் நிவாரணப்பொருட்களை வழங்கவில்லை.
முப்படையினரும், பொலிஸாருமே நிவாரணப்பொருட்களை வழங்கியிருந்தனர். நான் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒரு மீற்றர் சமூக இடைவெளியினை பின்பற்றியே இந்த பணிகளை பார்வையிட்டிருந்தேன்.
பின்னர் கொழும்பில் யாழ்ப்பாணத்திற்கு 11ஆம் திகதி காலை வேளையில் ஆனையிறவு சோதனைச்சாவடியை கடந்து வந்தேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினர் வழங்கிய தொற்றுநீக்கும் திரவம் மற்றும் எனது தனிப்பட்ட வாகனத்தில் வைத்திருக்கும் தொற்று நீக்கும் திரவம் என்பவற்றைப் பயன்படுத்தியதுடன், முகத்தை மூடும் கவசத்தையும் பயன்படுத்தியிருந்தேன். என்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு இராணுவத்தினரால் எந்வொரு அறிவுறுத்தல்களும் எனக்கு இதன்போது வழங்கப்படவில்லை.
எனினும் நேற்றைய தினமே நான் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தேன். கொழும்பிற்கு சென்றுவிட்டு வந்து மறுதினமே யாழ் அரசாங்க அதிபரினால் ஊடக சந்திப்பினை நடாத்த முடியும் என்றால் 11 நாட்களின் பின்னர் நான் ஊடக சந்திப்பினை நடாத்துவதில் என்ன தவறுள்ளது.
அத்துடன் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய தினம் ஊரடங்கு அமுலில் உள்ள கொழும்பில் இருந்து கொண்டு, ஊடகவியலாளர்களை அழைத்து எவ்வாறு ஒரு ஊடக சந்திப்பை நடத்த முடியும்.
நான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்ற காரணத்தினால் மாத்திரமே எனக்கு எதிராக அரசியல் நோக்கோடு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன“ எனக் குறிப்பிட்டார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)