
கர்நாடகாவில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ் கூட்டணி அரசின் மீது அதிருப்தியிலுள்ள ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதுடன் அமைச்சர்களும் இராஜினா செய்துள்ளமை இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
மேலும் கர்நாடக பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவையின் இன்றைய அலுவல்களை நிறுத்தி வைத்துவிட்டு, கர்நாடக பிரச்சனை குறித்து விவாதிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன்.பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களையும் எழுப்பினர்.
இதனால் அவையில் குழப்பம் ஏற்பட ஆரம்பித்தமையினால் அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். பின்னர் 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. எனவே, பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
ஆனாலும் 2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது இதே நிலைமை நீடித்தமையினால் நாளை வரை மாநிலங்களவை சபை அமர்வை அவர் ஒத்திவைத்தார்.
