மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி மழை நீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விஜயகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக நீர் நிலைகளை தூர்வார அதிக கவனஞ்செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும்.
மதுராந்தகம் ஏரி போன்ற மிக முக்கியமான ஏரிகள் அந்தந்த பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுபோல் அனைத்து ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரி தடுப்பணைகளை சீர்படுத்தி மழைநீரை சேமிக்க தமிழக அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
மேலும் மழைநீர் சேமிப்புக்காகவும், தடுப்பணைகள் அமைப்பதற்காகவும் தமிழக வரவுசெலவுத் திட்டத்தில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும் அரசு உடனடியாக இதனைச் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கின்ற நிலையை வரும் காலங்களில் உருவாக்க வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.