
ஒன்றுபட்டு செயற்பட்டால் 5 வருடங்களில் இலங்கை இந்து சமுத்திரத்தின் ஆரோக்கிய நாடாக விளங்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற புதிய சிந்தனைகளுடன் செயற்பட்டால் மாத்திரமே சிறந்த எதிர்காலத்தை அடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ருவான்வெல்லை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “ஒருவருக்கு ஒருவர் குறைக் கூறிக்கொண்டும் குற்றஞ்சாட்டிக் கொண்டும் இருப்பதால் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற புதிய கண்ணோட்டங்கள் எம்மிடையே ஏற்பட வேண்டும்.
அத்துடன் தற்போது உள்ள கடன் சுமை, நவீன அபிவிருத்திகளை முன்னெடுப்பதிலுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டுமாயின் ஏற்றுமதிகளையும், முதலீடுகளையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட சகலரும் நாட்டின் எதிர்காலத்தை மாத்திரம் சிந்தித்து ஒற்றுமையாக செயற்படுவோமாக இருந்தால் இலங்கை இன்னும் ஐந்து வருடங்களில் இந்து சமுத்திரத்தின் ஆரோக்கியமான நாடாக மாறும்” என அவர் குறிப்பிட்டார்.
