பாலின அடையாளங்கள் தொடர்பான நவீன கால கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்தும் ஓர் ஆவணத்தை கத்தோலிக்க கிறித்துவ தலைமையகமான வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
நேற்று (திங்கள்கிழமை) இந்த 31 பக்க ஆவணம் வெளியாகியுள்ளது. ‘ஆண்கள் மற்றும் பெண்கள், அவன் அவர்களை படைத்தான்’ என்ற பெயரில் கற்பிக்க வேண்டிய வழிகாட்டல் ஆவணம் ஒன்றையெ வத்திக்கான் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நெருக்கடிகள் குறித்து இந்த ஆவணம் பல கருத்துக்களை கொண்டுள்ளது. அத்துடன் மேலும் பாலின அடையாளங்கள் பற்றிய தற்போதைய விவாதங்கள் இயற்கை எனும் கருத்தையே அழிக்கக் கூடியதுடன் குடும்ப நிறுவன அமைப்பைச் சிதைக்கவல்லது என குறிப்பிட்டுள்ளது.
ஒரு பாலுறவுக்காரர்கள் உள்ளிட்ட எல்.ஜி.பி.ரி குழு மக்கள் (LGBT = Lesbian ∙ Gay ∙ Bisexual ∙ Transgender) பெருமை கொள்ளும் மாதத்தில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் உள்ள கருத்துக்கள் உடனடியாக எல்.ஜி.பி.ரி குழுக்களால் விமர்சனத்துக்குள்ளானது.
சிறுவர்களுடன் பணிபுரியும் நபர்களுக்கு ‘கற்பித்தல் வழிகாட்டியாக’ இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. கத்தோலிக்க கல்விச் சபை இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த ஆவணத்தில் போப்பாண்டவர் ஃபிரான்ஸ் கையெழுத்திடவில்லை.
திருநங்கை/ திருநம்பி சமூகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எப்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் சில வழிகாட்டுதல்களை கொண்டிருப்பதுடன், இந்த ஆவணம் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தைக்களை மேற்கொள்வதற்கான அழைப்பையும் விடுத்துள்ளது.
அதேவேளை, பாலின அடையாளங்கள் பற்றிய நவீன கால புரிதல்களை இந்த ஆவணம் விமர்சித்துள்ளது. பாலுறவு மற்றும் பாலின அடையாளங்களில் மாற்றம் ஆகியவை “உணர்ச்சி மற்றும் ஆசைகளின் அடிப்படையில் சுதந்திரம் குறித்த குழப்பமான கருத்தை விதைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை” என அந்த ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.
”பாலினம் என்பதை தனிப்பட்ட நபர்கள் முடிவுசெய்ய முடியாது. இறைவன் படைப்பில் ஒருவர் ஆணா பெண்ணா என்பது தீர்மானிக்கப்படுகிறது” என ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.