வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்லது நஃப்டா உடன்படிக்கையில், கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அந்நாட்டின் துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையிலான இந்த உடன்படிக்கையில் திருத்தங்களை செய்து துரித கதியில் கைச்சாத்திட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ள அவர், கனடாவும், மெக்ஸிக்கோவும் இந்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான ஆயத்த நிலையில் இருப்பதாகவே தென்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உடன்படிக்கைக்கு பதிலீடாக கடந்த ஆண்டு இறுதியில் மூன்று நாடுகளும் செய்து கொண்ட புதிய உடன்படிக்கையில் இதுவரையில் திருத்தங்கள் செய்யப்படவில்லை.
உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி இதுவரையில் தளர்த்தப்படவில்லை. இவ்வாறான ஓர் பின்னணியில் நப்டா உடன்படிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகின்றது.
எனினும், முதலில் வரி விதிப்பு நீக்கப்படும் வரையில் உடன்படிக்கையில் திருத்தங்களை செய்வதற்கு கனடா அவசரம் காண்பிக்காது என வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.





