
பிரபல இணைய விற்பனைத் தளத்தில் 23 வயதான யுவதி ஒருவர் தனது மடிக்கணினியை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தார்.
அதனை கொள்வனவு செய்வதற்கு ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கமைய மறுதினம் அதனை கொள்வனவு செய்வதற்காக இருவர் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்த மடிக்கணினியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இதன்போது அவர்களில் ஒரு இளைஞனின் இடுப்பில் இருந்த துப்பாக்கி ஒன்று கீழே வீழ்ந்துள்ளது. அண்மையில் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றில் குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மறுதினம் பெண்ணிடம் திருடிய மடிக்கணினியை இணையத்தின் ஊடாக விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விற்பனை செய்ய தயாராகிய இளைஞருடன் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு அவரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரிடம் மடிக்கணினி ஒன்றும், பெரிய கத்தி, துப்பாக்கி உட்பட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குழுவாக செயற்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய அந்த குழுவில் இயங்கியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறுவர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். குழுவாக செயற்படும் இவர்களிடம் சிறுவர்களும் உள்ளமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக ரொறென்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் டொரொன்டோவை சேர்ந்த 18 வயதான தாஜீன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஸன் லக்ஷ்மிகாந்தன் ஆகிய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குழுவில் உள்ள சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் ஜுலை மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
