கனடாவில் 1940-களின் இறுதியில், அல்பெர்ட்டா பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில், பிட்டுமென் மற்றும் கச்சா எண்ணெய் மண் படிமங்களாக இருந்தன.
எனவே, அதைப் பிரித்தெடுப்பது எளிதானதாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து, புதிதாக எரிபொருள் நிறுவனங்கள் அல்பெர்ட்டா பகுதியில் கால் பதித்தன. அதன்படி எரிபொருள் வளத்தைச் சுரண்ட ஆரம்பித்தன.
ஆனா,ல் அவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால், கடல்பகுதிதான் ஏற்றதாக இருக்கும்.

அதை பாரவூர்திகளில் கொண்டுசென்றால் நேர விரயமும், செலவும் அதிகமானது. அதன் பின்னர்தான், எண்ணெய்க் குழாய் இதற்குச் சரியான தீர்வாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 1953-ல் எண்ணெய்க் குழாய் பயன்பாட்டுக்கு வந்தது. ட்ரான்ஸ் மவுன்டெயின் பைப்லைன் எனப்படும் இந்த திட்டம் அல்பெர்ட்டா பகுதியிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரை வரைக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டுசெல்கிறது.
1150 கிலோ மீட்டர் தூரம்கொண்ட இந்தக் குழாயில், பம்ப்பிங் ஸ்டேஷன்களும் வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது, இந்தக் குழாயின் விரிவாக்கத் திட்டத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அனுமதியளித்திருக்கிறார். அதன்படி, ஏற்கனவே இருக்கும் குழாய்க்கு அருகில் கூடுதலாக இரண்டு எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்படும்.
இதன்மூலமாக 3 லட்சம் பீப்பாய்களாக இருக்கும் இதன் கொள்ளளவு, 8 லட்சம் பீப்பாய்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் இதனால் கிடைக்கும் பலனை மட்டுமே நோக்காக கொண்டுள்ளது. ஆனால், பூர்வ குடிகள் இதன் மறுபக்கத்தை பற்றி சிந்தித்து வருகிறார்கள்.

முதலில் குழாய் பதிக்க நிலம் வேண்டும். அடுத்ததாக, அதிக அளவில் கச்சா எண்ணெய் கொண்டுசெல்லப்படும் போது, அது கடற்கரைப் பகுதியில் போக்குவரத்தை அதிகரிக்கும்.
அப்போது, அதற்கான கட்டமைப்புகளை அதிகப்படுத்த வேண்டியேற்படும். ஏற்றுமதியும் அதிகமாகும் என்பதால், கடலில் கப்பல்களின் வரத்து அதிகமாகும். மறுபக்கம் அல்பெர்ட்டாவில் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும். அதன் காரணமாக அந்தப் பகுதியிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாகும் என்று பூர்வ குடிகள் தமது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளனர்.
