
மொர்சியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மொர்சி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் மொஹமட் மொர்சி. இவர் ஜனாதிபதியாக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்நாட்டு இராணுவம் அவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது.
ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, மொர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகளும் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.
இதனிடையே வழக்கு விசாரணைக்காக மொர்சி கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மொஹமட் மொர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், மொர்சியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அறையில் 20 நிமிடங்கள் நெஞ்சுவலியால் துடித்த மொர்சிக்கு, யாரும் உதவவில்லை. இதனால் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என தான் கூறுவதாக எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் ஜப்பானில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டில் இந்த விவகாரம் குறித்து எர்டோகன் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
