
ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்வதற்காக இரும்புக் கம்பிகளைக் கொண்டு மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்ததன.
இந்நிலையில், மாலை ஐந்து மணியளவில் பந்தலின் ஒருபகுதி திடீரென்று சரிந்து வீழ்ந்தது. இதில் 14 பேர் உயிரிழந்ததோடு, 20இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதேவேளை, குறித்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பந்தல் சரிந்ததில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் உட்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
